அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தையடுத்து, அரசுத் தேர்வுகள் இயக்கக அலுவலகங்களில் போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை (ஆக.22) அச்சமின்றி அலுவலகத்துக்கு வரலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறாமல் அலுவலகத்துக்கு வருகை புரியும் பணியாளர்களுக்கு போராட்டக்காரர்களால் எந்தவொரு பாதிப்பு ஏற்படாத வகையில், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தலைமை அலுவலகம் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மண்டல அலுவலகங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க: மேலும், அலுவலகத்துக்கு வருகை தரும் பணியாளர்கள் எவரேனும் அச்சுறுத்தப்பட்டால், அதன் விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு 94442 16250 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். எனவே, பணியாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி செவ்வாய்க்கிழமை (ஆக.22) பணிக்கு வரலாம் என்று தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.