ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர் என்று அப்பல்லோ மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. உடல்உறுப்பு தானம் அளிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலானோர் பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் உறவினர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பிரதாப் சி.ரெட்டி பேசியது: ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 9 பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்தியாவில் 50 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கின்றனர். ஆனால் வெறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே மாற்று சிறுநீரகம் கிடைக்கிறது. இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளுக்கான பற்றாக்குறை அதிக அளிவில் உள்ளன. உடல் உறுப்புதானம் கிடைக்காமல் ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தாலும், அதற்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது என்றார் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி. தமிழ்நாடு உடல்உறுப்பு மாற்றத் திட்டத்தின்இயக்குநர் பாலாஜி, மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.