மருத்துவ மாணவர் சேர்க்கை: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான முக்கிய முடிவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.22) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கை: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பான முக்கிய முடிவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.22) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்றினால், அதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முன்வந்தது. இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் அவரசச் சட்டத்துக்கான முன்வரைவு மத்திய அரசிடம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்துக்கு அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து சட்டத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, மத்திய சுகாதாரத் துறை ஆகியவை ஒப்புதல் அளித்தன. இதனையடுத்து உள்துறை அமைச்சகத்திடம் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான இந்த வரைவு அனுப்பப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்நிலையில் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வுமுறையை சீர்க்குலைக்க அனுமதிக்க முடியாது. மேலும் இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவரம், நீட் தேர்வு முடிவு, கிராமப்புற மாணவர்களின் பின்னணி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
2,653 கூடுதல் இடங்கள்: இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 2,653 இடங்களுக்கு அனுமதியளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் (எம்.சி.ஐ) தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திட்ட அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி தாக்கல் செய்தார். இது தொடர்பான முடிவை எம்.சிஐ. இன்னும் தெரிவிக்கவில்லை.
இன்று முக்கிய முடிவு: உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.22) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தமிழக அரசு அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும். மேலும் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு திருப்தி அளிக்கும் பதிலைத் தெரிவிக்கும் பட்சத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட்டிப்பு இல்லை: மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால் மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளை ஆகஸ்ட் 31-இல் இருந்து நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாளை நீட்டிப்பு செய்ய அனுமதியளிக்க எம்.சி.ஐ. மறுத்துவிட்டது. மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறாவிட்டால், அனைத்து இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
அவசரச் சட்டம்: எனவே மாணவர் சேர்க்கை தொடர்பான தெளிவான முடிவை விரைவில் எட்ட வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசின் அவசரச் சட்டம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நிறைவேற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், அவரசச் சட்டம் தொடர்பான அறிவிப்பும் செவ்வாய்க்கிழமை வெளியாக வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com