எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: ஓசூர் மாணவர் சந்தோஷ் முதலிடம்; மேலும் தகவல்களுடன்!

தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் ஓசூர் மாணவர் சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: ஓசூர் மாணவர் சந்தோஷ் முதலிடம்; மேலும் தகவல்களுடன்!


சென்னை: தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் ஓசூர் மாணவர் சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.

இதில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் 27,488 பேர். கடந்த ஆண்டு +2 படித்து இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 5,636 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 3,418 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 31,692 மாணவர்கள் கொண்ட இந்த தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.

தரவரிசைப் பட்டியலில் ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ் 656 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த சையத் 651 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நாளையே கலந்தாய்வு தொடங்குவதால், அது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்கள் குறுந்தகவல் மூலமும் அனுப்பப்படும் என்று ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கு நாளை மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இது குறித்தத் தகவல் தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


முதல் 20 இடங்களில் சிபிஎஸ்இ மாணவர்கள் 5 இடங்களைப் பிடித்தனர். 6 முதல் 20 இடங்களில் மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் பிடித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com