சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கோபியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் குடியரசு, சுதந்திர தின விழாவில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு அபராதம் விதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குடியரசு, சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களாகவே முன்வந்து இவ்விழாக்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.