புதுச்சேரியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி அரசுக்கான தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடந்த 22-ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் கடிதம் அளித்து விட்டு, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் புதுச்சேரி அருகேயுள்ள சின்னவீராம்பட்டினம் சொகுசு விடுதியில் தங்கினர்.
இந்த நிலையில், அந்த சொகுசு விடுதியில் தங்குவதற்கு ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் வந்ததால், தமிழக எம்.எல். ஏ.க்கள் அந்த விடுதியைக் காலி செய்ய நிர்வாகம் வலியுறுத்தியது. அதனால், புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 18 பேரும் தங்க வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோரும் புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தனர்.
இதனால், புதுச்சேரியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது கடற்கரையில் நடைபயிற்சியும், பூங்காவில் விளையாடியும் எம்.எல்.ஏ.க்கள் பொழுதைக் கழித்தனர். ஆனால், நட்சத்திர ஹோட்டலில் அதுபோன்ற வசதிகள் இல்லை. ஆனாலும், காலை சில எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலுக்கு வெளியே சென்று நடைபயிற்சி மேற்கொண்டதுடன், சாலையோரம் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்தனர்.
தங்களால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை என்பதால், மீண்டும் சொகுசு விடுதிக்கே அழைத்துச் செல்லும்படி வலியுறுத்தினர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வீராம்பட்டினத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
5 நாள்களுக்கு அவர்களுக்கு அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.