நீட் தேர்வு விண்ணப்பத்தில் தவறு செய்த மாணவரின் கோரிக்கையை பரிசீலிக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை வள்ளுவர் காலனியைச் சேர்ந்த மாணவி கே.எம்.சுபிக்ஷா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடப்பு ஆண்டின் நீட் தேர்வு எழுதினேன். நான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்(ஓபிசி) சேர்ந்தவர். ஆனால், நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது என அறியாமையால் யுஆர் எனப்படும் இடஒதுக்கீடு அல்லாத பிரிவை தேர்வு செய்துவிட்டேன். ஆனால், விண்ணப்பத்துடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கான சான்றை இணைந்திருந்தேன்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் கட்-ஆப் மதிப்பெண் 108 பெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றேன். ஆனால், விண்ணப்பத்தில் தவறு செய்த காரணத்தால் கலந்தாய்வின் ஓபிசி பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
எனவே விண்ணப்பிக்கும்போது நான் அறியாமையால் செய்த தவறை மன்னித்து என்னை ஓபிசி பிரிவில் மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று ஓபிசி பிரிவின் கீழ் மனுதாரரை கலந்தாய்வில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.