திருச்சி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிக் கிடந்த செவிலியர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கல்லக்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தவர் கலாவதி (55). ஆகஸ்ட் 26ஆம் தேதி வீட்டின் குளியலறையில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த கலாவதியை அவரது சகோதரர் இளஞ்சிநாதன் மற்றும் உறவினர்கள் மீட்டு கல்லக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கலாவதியை அனுமதித்தனர்.
இதுகுறித்து கலாவதி கல்லக்குடி போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வடுகர்பேட்டை அருகே உள்ள செம்மண்பாளையம் பகுதியைசச் சேர்ந்த சிமியோன்ராஜ் மகன் அகஸ்டின்லியே (21), அய்யாத்துரை மகன் ராமன் (20) ஆகிய இருவரும் கலாவதியிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதை கலாவதி இருவரின் பெற்றோரிடம் தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கலாவதியை சேலையால் கை, கால்களை கட்டி, வாயில் துணியை திணித்து குளியலறையில் பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீரில் அமுக்கியுள்ளனர். இதில், கலாவதி மயக்கமடைந்ததால் இறந்து விட்டதாக கருதி இருவரும் தப்பிச் சென்றனர் என தெரியவந்தது.
இதனையடுத்து அகஸ்டின்லியே, ராமன் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிந்து இருவரையும் தேடிகண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாவதி செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் அகஸ்டின்லியே மற்றும் ராமன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக செவ்வாய்க்கிழமை மாற்றி விசாரித்து வருகின்றனர்.