திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில், கல்லூரி மாணவர் இணையதளத்தில் புளூ வேல் என்ற விபரீத விளையாட்டால், புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்தவர் ஜெயமணி. இவரது மகன் விக்கி (19). இவர், இப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவர் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரது உடலை சோதனையிட்டதிதல், மாணவர் விக்கி கையில் (புளூ வேல்) எனஆங்கிலத்தில் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. பின்னர், அவரது உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியது: சமீப காலமாக, நீலத் திமிங்கல சவால்(புளூ வேல்) என்ற இணையதள விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு ஆபத்தான சவால்களை கொண்ட இந்த விளையாட்டுக்கு அடிமையாகி, முடிவில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மாணவர் விக்கி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றோம் என்றனர்.