கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் புதன்கிழமை முதல் அனுமதியளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் செல்வார்கள். கடந்த நவ.30 ஆம் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் கன மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வனத்துறையினர் அருவி பகுதிக்கு செல்ல, குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தனர். சபரிமலை சீசன் என்பதால் ஐயப்பன் கோயில் செல்லும் வழியில் உள்ள சுருளி அருவியில் குளிக்க வந்த பக்தர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். இதன் பின்னர் கடந்த திங்கள்கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்திருந்தாலும், குளிக்கத் தடையை நீட்டித்து பார்க்க மட்டும் வனத்துறையினர் அனுமதியளித்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை முதல் அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளித்தனர். இதனால் பொதுமக்கள், ஐயப்பப் பக்தர்கள் மகிழ்ச்சியாக அருவியில் குளித்துச் சென்றனர்.