தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டு செய்தியாளரை தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அப்போதைய எம்.எல்.ஏ., அனகை முருகேசன் ஆகிய இருவர் மீதும் விமான நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மருத்துவ சிகிச்சைக்காக கடந்த நவம்பர் 28-ஆம் தேதி சிங்கப்பூர் சென்றுள்ள விஜயகாந்த், வரும் டிசம்பர் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை திரும்புவதாகவும், அனகை முருகேசனும் உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே, இந்த பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கும் எதிராக பிறப்பிக்கப்பட் ட பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.