தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 9- ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே சுமார் 875 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிச.9 -ஆம் தேதி வாக்கில் புயல் சின்னமாக மாறும். ஆனால், வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்பகுதிகளை நெருங்கும்போது பலவீனம் அடையும். இதனால் தமிழகத்துக்கு புயல் பற்றிய அச்சம் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக மீனவர்கள் வங்கக் கடலில், ஆழ்கடல் பகுதிகளுக்குள்ளும், வட தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியிலும், ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடற்பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைப் பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.