மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தர் நுழைய தடை நீட்டிப்பு

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தர் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தர் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த எம். ஜெகதலபிரதாபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை ஆதீன மடத்தின் 293 -ஆவது மடாதிபதியாக நித்யானந்தர் நியமிக்கப்பட்டது முறையல்ல. அவர் மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மறைத்து சட்டத்துக்கு புறம்பாக ஆதீன மடத்தின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் மடத்துக்குள் செல்ல பாதுகாப்பு கோரி நித்யானந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும். எனவே, ஆதீன மடத்துக்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தர் நுழைய இடைக்கால தடை விதித்து நீதின்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தடையை நீக்கக் கோரி நித்யானந்தர் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை ஆதீன மடத்தில் நித்யானந்தர் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது. 
இம்மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை இறுதி விசாரணைக்காகவும், தீர்ப்புக்காகவும் வரும் 13 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com