உதகை மலை ரயில் வழக்கம்போல் இன்று இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சனிக்கிழமை உதகை சென்ற மலை ரயில் குன்னூரில் நிறுத்தப்பட்டதால், அதன் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
உதகை மலை ரயில் வழக்கம்போல் இன்று இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து சனிக்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்பட்டு சென்ற உதகை மலைரயில் கல்லாறு ரயில் நிலையத்தை கடந்து ஹில்குரோவ்-ரன்னிமேடு இடையே பாலத்தை கடக்கும்போது, என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பர்னர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் என்ஜின் ஓட்டுநர் பூபதி, உதவி ஓட்டுநர் சதீஷ், மற்றொரு ஊழியர் வினோத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மலை ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குன்னூரிலிருந்து இரு பெட்டிகளுடன் சென்ற மாற்று ரயில் மூலம் நடுவழியில் நின்ற பயணிகள் மீட்கப்பட்டு குன்னூர் அழைத்து வரப்பட்டனர். இதனால் பழுதடைந்த என்ஜின் மாற்று ரயில் மூலம் குன்னூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் மலை ரயில் மேட்டுப்பாளையம் திரும்பி வந்து சேரவில்லை.
இதனால் மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மலை ரயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து வழக்கம்போல் திங்கள்கிழமை(டிசம்பர் 11) மலை ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.