குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்துவிட்டது. இருப்பினும், குமரிக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்பட்டது. பின்னர் இது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சனிக்கிழமை வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடலில் நீடிக்கிறது.
இதற்கிடையில், குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.