திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெறவும், குடிநீர் மற்றும் சமுதாய பயன்பாட்டுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனை ஏற்று, வரும்
14- ஆம் தேதிமுதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 6113.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மணிமுத்தாறு அணை... விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 ஆவது முதல் 4 ஆவது பிரிவுகளின் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.