சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் செவ்வாய்க்கிழமை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே அதிகப் பனி காணப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பனி இறங்கியதால், பெரும்பாலான வாகனங்களில் முகப்பு விளக்கு போட்டபடியே வாகனம் ஓட்டினர்.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை முற்றிலும் மறையும் அளவுக்கு கடும் பனி நிலவியது. இதனால் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானம் பெங்களூருக்கும், மும்பையில் இருந்து வந்த விமானம் ஐதராபாத்துக்கும் திருப்பி விடப்பட்டன.
சார்ஜா, இலங்கை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு புறப்படத் தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சற்று தாமதமாக புறப்பட்டுச் சென்றன.