மெரீனா கடல் அலையில் சிக்கி பலியாவது தொடர்பான வழக்கில், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஆகாஷ், கடந்த செப்டம்பர் மாதம் மெரீனா கடற்கரையில் குளித்த போது அலையில் சிக்கி மாயமானார். இந்த நிலையில் தனது மகனை மீட்டுத்தரக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர் மற்றும் என்.சதீஸ்குமார் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி நீதிபதிகள் அறையில் ஆஜராகி, மெரீனாவில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்ட 4 கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்க தொடர் ரோந்து பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 162 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலரது உடல்களை மீட்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதனையடுத்து நீதிபதிகள் இனிவரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.