தமிழகத்தில் ரேக்ளா பந்தயம் நடத்தத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு,ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவைகளுக்ககு தடை விதித்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், எருது விரட்டு, மாடு வடம் பிடித்தலுக்கு அனுமதியளிக்கப்பட்டன.
மாடுகளை துன்புறுத்தும் வகையில் நடத்தப்படும் ரேக்ளா பந்தயங்களை நடத்த உச்சநீதிமன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே ரேக்ளா பந்தயங்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் கே.ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் மாடுகள் தொடர்பான அனைத்து விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மனுதாரர் இதுகுறித்து
உச்ச நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும் என்றார். இதனையடுத்து நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி இந்த மனுவை முடித்து வைத்தனர்.