ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாதவர்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ. 6 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை உயர்த்தி வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் நிவாரண நிதி உதவியுடன், கூடுதலாக ரூ. 6 லட்சம் நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கன்னியாகுமரி மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.