சென்னை: தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பாக நடக்கவுள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி டிசம்பர் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழநாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய யலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018 ஆம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இப்பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது