ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவுடனான சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
இடைத் தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மற்றும் தினகரன் அணி சார்பில் நடத்தப்படும் முறைகேடுகள் குறித்து சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் திமுக சார்பில் 20 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 100 கோடி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஆதாரங்களுடன்புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவை குறித்தும் ஆதாரங்களுடன் தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி வரும் காலத்தில் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாத அளவுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினோம் என்றார்.