சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த பத்திரங்களை திரும்ப அளிக்காத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, மண்டல துணை பதிவுத் தலைவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:- சார்-பதிவாளர் அலுவலகங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் உரிய நபர்களிடம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மாவட்ட பதிவாளர் (தணிக்கை) ஆகியோர் மேற்கொள்ள வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆய்வினை முடித்து அதற்கான அறிக்கையை மண்டல துணை பதிவுத் தலைவர்களிடம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்த ஆவணங்கள் ஏதும் பொது மக்களிடம் திரும்ப அளிக்கப்படாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வுப் பணிகளை முடித்து அதற்கான அறிக்கைகளை வரும் 29 ஆம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டுமென பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏற்கப்படாது என்றார்.