ஆம்பூர் அருகே காண்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக மேகமலை வனப்பகுதி திகழ்கிறது.
ஆம்பூர் அருகே உமராபாத்தை அடுத்த மாச்சம்பட்டு கொத்தூரை ஒட்டி காப்புக்காடுகள் அமைந்துள்ளன. ஆம்பூர் வனச்சரகத்தில் மாச்சம்பட்டு மற்றும் கொத்தூர் காடுகள் வளமான பகுதிகளாக உள்ளன. இந்த காப்புக்காடுகளில் ரெட்டிக்கிணறு, தகரத்தோப்பு, ஜம்பூத்து, மேகமலை என்னும் மேகக்குட்டை, மேகமலை ஏரி ஆகியவை வளமான பகுதிகளாகும்.
கொத்தூருக்கு மேற்கே உள்ள மேகமலையும், மேக குட்டையும் இந்த மலையின் மீது மேகங்கள் தவழ்ந்து செல்வதால் மேகமலை என அழைக்கப்படுவதாகவும், வெள்ளாடுகள் தங்கி மேயும் பாறைகள் நிறைந்த வனப்பகுதியாக இருப்பதால் தெலுங்கு பேசுபவர்கள் மேக்க குட்ட (வெள்ளாடுகள் காடு) என அழைப்பதாகவும் கூறுகின்றனர். மேகமலை என்னும் மேக குட்டையில் வனப் பகுதியில் தண்ணீர் வற்றாமல் ஓடுவதால், பச்சை பசேல் என பச்சை போர்வை போர்த்தியது போல் அப்பகுதி பசுமையுடன் காட்சியளிக்கிறது. மேகமலையில் வனவிலங்குகள், கால்நடைகள் தண்ணீர் அருந்துவதற்காக குளம் ஒன்று காணப்படுகிறது. அந்த குளத்தில் வன விலங்குகள், கால்நடைகள் இறங்கி தண்ணீர் அருந்த வசதியான கட்டமைப்புடன் பழங்காலத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.
மேகமலையில் உள்ள வற்றாத குளத்தில் தண்ணீர் எப்போதும் இருப்பதால் சிறுத்தைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் நிரந்தரமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.