தமிழகத்தில் 17 ரயில் நிலையங்களில் இதுவரை வைஃபை வசதி தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளதால் பல்வேறு ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமேசுவரம், அரக்கோணம், காட்பாடி, கோவை, மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ஆகிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரளத்தில் கோழிக்கோடு, மங்களூரு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், 26 ரயில் நிலையங்களில் வைஃபை வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயன்படுத்துவது எப்படி: பயணி ஒருவர் ரயில் நிலையத்துக்கு சென்றவுடன் தனது செல்லிடப்பேசியில் உள்ள வைஃபை இணைப்பு வசதியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு, பயணியின் செல்லிடப்பேசிக்கு ஒருமுறை கடவுச் சொல் (One Time Password) அனுப்பப்படும். அதை பதிவிட்டதும் 30 நிமிடம் இலவசமாக அதிவேக இணையதளச் சேவையை ரயில் வைஃபை மூலம் பெறமுடியும்.