தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் பதவி உயர்வுக்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததாக அந்த வாரியத்தின் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உதவி மேலாளராகப் பணிபுரிபவர் சுதர்சன். இவர், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் அண்மையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தங்களது அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆவடி பருத்திப்பட்டு அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த வா.கோட்டீஸ்வரராவ் (52), கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெறுவதற்கு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றதுபோல கடந்த 2007-இல் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்திருப்பதாகவும், அண்மையில் அவருக்கு உதவி இயக்குநர் பதவி உயர்வு வழங்குவதற்கு சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது தெரியவந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கோட்டீஸ்வரராவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தனது கல்வித் தகுதிக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற முடியாது என்பதால், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதுபோல சான்றிதழ்களைச் சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோட்டீஸ்வரராவை போலீஸார் கைது செய்தனர்.