பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், "பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மீனவர்கள் அந்தத் தொழிலைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்' என்றார்.
அப்போது டி.ஜெயகுமார் குறுக்கிட்டுக் கூறியது: தொழிலைத் தொய்வில்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, மீனவர்களுக்கான நிதியை வழங்க வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் இது போன்ற பிரச்னை உள்ளது என்று குறிப்பிட்டால், அந்த இடத்தில் ஏடிஎம் வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
அனிதா ராதாகிருஷ்ணன்: ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சம்வரைகூட மீனவர்கள் செலவிட வேண்டியுள்ளது. இதில் எப்படி அவர்களுக்குத் தேவையான பணத்தை ஏடிஎம்களில் இருந்து எடுக்க முடியும்?
டி.ஜெயகுமார்: பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டியது மத்திய அரசுதான். தற்போது மீனவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனிதா ராதாகிருஷ்ணன்: மீனவர்கள் நலத்துக்காகவே கூட்டுறவு வங்கி ஒன்றை ஏற்படுத்தி, அதில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.