திருமுல்லைவாயல்-ஆரிக்கம்பேடு பிரதான சாலையில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கான உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாடின்றி பாழடைந்த நிலையில் உள்ளது.
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்குடியிருப்பில், சுமார் 70 வீடுகள் உள்ளன. பயன்பாடும், பராமரிப்பும் இல்லாமல் உள்ளதால், குடியிருப்பைச் சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்து, இந்த பகுதி புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், வீட்டின் ஜன்னல், கண்ணாடிகள், கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ. 7 கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்புக் கட்டடம் வீணாகிக் கிடக்கிறது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காவல் ஆய்வாளர் பதவிக்கு மேலுள்ள அதிகாரிகளுக்காக இந்த குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால், இந்த இடம் கட்டும் போது இந்த பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அதனால் யாரும் இங்கு குடியேறவில்லை. எனவே, இனியாவது இக்கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.