மதுரை: மனுதாரர் ஒருவருக்கு நில அளவை செய்து தனிப்பட்டா வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாருக்கு ஆறு வார 'சமூக சிறை தண்டனை' அளித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர்கள் ஹுசைன் மொகம்மது மற்றும் ஜவாஹிர் அலி. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறின் காரணமாக நிலங்களை அளவை செய்து தனித்தனி பட்டா வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாரை அணுகினார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே அவர்கள் மேலூர் முன்சீப் நீதிமன்றத்தைஅணுகினார்கள். வழக்கை விசாரித்த முன்சீப் நீதிமன்றமானது உடனடியாக நிலங்களை அளவை செய்து தனித்தனி பட்டாக்கள் வழங்குமாறு ஆணை பிறப்பித்தது. இதே வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும் தனித்தனி பட்டாக்கள் வழங்குமாறு மேலூர் நீதிமன்ற ஆணையை உறுதி செய்தது. ஆனால் அப்போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடும் ஏமாற்றத்துக்கு ஆளான மனுதாரர்கள் ஹுசைன் மொகம்மது மற்றும் ஜவாஹிர் அலி இருவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தார் மீது மேலூர் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இதனை இன்று விசாரித்த மேலூர் முன்சீப் நீதிமன்றமானது வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாருக்கு ஆறு வார 'சமூக சிறை தண்டனை' அளித்ததுடன் அவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டது.