சென்னை: எண்ணூர் அருகே விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் இந்திய கடலோர பாதுகாப்புப் படை சிறைபிடித்தது.
சென்னைக்கு அருகே கடலில் டான் காஞ்சிபுரம் மற்றும் எம்.பி.டபிள்யூ. கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஏராளமான எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் கடல் மாசடைந்து, ஏராளமான நீர் வாழ் உயிரினங்கள் பலியாகின.
பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மீனவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த உயர் நீதிமன்றம், கப்பல்களை சிறைபிடிக்குமாறு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கப்பல்களை சிறைபிடித்து இந்திய கடலோர பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்துள்ளது.
எண்ணூர் துறைமுக எல்லைக்குள் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை இரண்டு கப்பல்களும் விடுவிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.