அதிமுக அமைப்பு செயலர்களாக செங்கோட்டையன், துரைசாமி

அதிமுக அமைப்பு செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அமைப்பு செயலர்களாக செங்கோட்டையன், துரைசாமி

அதிமுக அமைப்பு செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அமைப்பு செயலர்கள்: எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவர் வரகூர் ஏ.அருணாசலம், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.எஸ்.நிறைகுளத்தான், எஸ்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.அண்ணாமலை, கே.கே.உமாதேவன், வி.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் புத்தி சந்திரன் ஆகியோர் அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற அமைப்புகளுக்கு...: எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலராக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதியும், இணைச் செயலராக எம்எல்ஏ என்.முருகுமாறன், மீனவர் பிரிவுச் செயலராக அமைச்சர் டி.ஜெயக்குமார், இணைச் செயலர்களாக நீலாங்கரை எம்.சி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கிய அணிச் செயலராக முன்னாள் எம்எல்ஏ கோ.சமரசம், இணைச் செயலராக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலராக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


முதல் முறை நியமனம்

அதிமுக பொதுச் செயலராக வி.கே.சசிகலா பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக கட்சியில் மிகப் பெரிய அளவிலான நியமனத்தை செய்துள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளை மட்டுமே சசிகலா மேற்கொண்டு வந்தார். கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள பிரிவுகளுக்கு நிர்வாகிகள் நியமனம் போன்ற பணிகளை இதுவரை மேற்கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
அண்ணா நினைவு நாளன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 பேர் விடுவிப்பு

அதிமுக நிர்வாகிகள் 2 பேர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.அலெக்சாண்டர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பார்.
மேலும், அதிமுக மீனவர் பிரிவுச் செயலர் பொறுப்பில் இருக்கும் நீலாங்கரை முனுசாமி அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com