தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அரசு உடனே திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், 3 வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.
இதேபோன்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், விளையாட்டு அரங்கம், மாவட்ட அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை.
மக்கள் பயன்பாட்டுக்கான இக்கட்டடங்கள் இன்னும் திறக்கப்படாததால், பல கட்டடங்களுக்கு பல கோடி ரூபாய் வீணாக வாடகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.