மெரீனா கடற்கரையில் இளைய சமுதாயத்தினர் நடத்திய அறவழி போராட்டத்திற்கான வித்து காந்தியடிகளிடம் இருந்து வந்தது என ஒருங்கிணைந்த காந்திய மைய அறக்கட்டளை விழாவில் வருமான வரித்துறை ஆணையர் வி.பழனிவேல்ராஜன் பேசினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா வளாகத்தில் வினோபா பாவே, காந்தியடிகள், நிர்மலா தேஷ் பாண்டே உள்ளிட்டவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கிடையேயான பேச்சு, கவிதை, கட்டுரை, மற்றும் பாடல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் வருமான வரித்துறை ஆணையர் வி.பழனிவேல்ராஜன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பேசியதாவது: உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பைக் கொண்டவர் காந்தியடிகள். ஆட்சி அதிகாரத்தை ஒருபோதும் விரும்பாதவர். காந்தியம் என்பது வாழ்க்கை நெறி, பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், ஆழமான விஷயங்களை உள்ளடக்கியது.
ஜனவரி 12 முதல் 18 வரை இளைஞர்கள் நடத்திய மக்கள் இயக்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். இளைய சமுதாயத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கான வித்து காந்தியடிகளிடம் இருந்து வந்தது. அமைதி, உண்மை, பொது வாழ்வில் தூய்மை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வில் பெற வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தக்கர் பாபா வித்யாலயா சமிதியின் நிறுவனர் வி.கே.ஸ்தாணுநாதன், தலைவர்
முனைவர் எஸ். பாண்டியன், வருமான வரித்துறை ஆணையர் மனைவி சித்ரா பழனிவேல்ராஜன், ஒருங்கிணைந்த காந்திய மைய அறக்கட்டளையின் மேலாளர் பி.மாருதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக போட்டிகளில் வெற்றிபெற்ற தரமணி எம்.ஏ.சிதம்பரம் செவிலியர் கல்லூரிக்கும், ராயப்பேட்டை ஸ்ரீ வெங்கடேஷ்வரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.