சசிகலாவுக்கு எதிர்ப்பு: பன்னீர்செல்வம் தொகுதி மக்கள் உண்ணாவிரதம்
போடிநாயக்கனூர்: அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7ஆம் தேதி) முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பு ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை கிராம பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதைபோல சசிகலா முதல்வராக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சசிகலாவிற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.