இந்தியாவிலேயே முதல்முதலாக முதியோருக்கான மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பாஜக சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழா, மாநில பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் சக்தி உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள், மாணவர்களின் உணர்வை புரிந்து கொண்டு, அதை மதித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் மற்றும் அரசாணை கொண்டு வரப்பட்டது. ஆனால், மாணவர்கள் போராட்டத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றனர். இந்த சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ரூ. 150 கோடியில் முதல்முதலாக முதியோருக்கான 2 மருத்துவமனைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பாஜகவால் கால் ஊன்ற முடியாது என காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் 2 கழகங்களுக்கும் மாற்றாக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்றார் அவர்.
பேட்டியின்போது கோட்ட பொறுப்பாளர் எம். சிவசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.