சென்னை: நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமானது அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். . அவரது பெயரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய, பிற எம்.எல்.ஏ.க்களும் வழிமொழிந்தனர்.
அவர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கு வசதியாக பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து ஆளுனருக்கு கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
தற்பொழுது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தில்லி சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை செவ்வாயன்று ஆளுநரை கிண்டி ஆளுநர் இல்லத்தில் சசிகலா சந்தித்துப் பேசுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகதான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கி, புதிதாக பதவி ஏற்கும் அமைச்சரவை பட்டியலையும் கவர்னரிடம் வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக சசிகலா வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று பதவி ஏற்கிறார். அன்று பகலில் பதவி ஏற்பு விழா கலைவாணர் அரங்கத்திலோ அல்லது எளிமையாக ஆளுநர் மாளிகையிலோ நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
பதியேற்பு விழாவினை உத்தேசித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கோ, தொகுதிகளுக்கோ உடனடியாக செல்ல வேண்டாம் என்றும் 4 நாட்களுக்கு சென்னையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அதிமுக கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.