ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவிகள் 6 பேர் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. ராஜீவ் காந்தி நினைவகம் அருகே பேருந்து வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் அரசுப் பேருந்தின் ஓட்டுநரும் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது, அதன் பின்னால் ஆற்காட்டிலிருந்து இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சிகாமணி (42), ஆற்காட்டைச் சேர்ந்த சேகர் (45), வேலூரைச் சேர்ந்த நரசிம்மன் (52), வடமங்கலம் மஞ்சுளா (30), திருமணிகுப்பம் கவுசல்யா (45), வடமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஜெயஸ்ரீ (16), சிவசக்தி (14), ஜெனிபர் (14), ஷேகானாகவுஷர் (15), தேவகி(16), மேகா (17) ஆகியோர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.