உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கு ஆளுங்கட்சியின் பலவீனமே காரணம் என்றார் திமுக செயல் தலைவரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக செயலருமான கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர், சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இதுவரை கேலிக்கூத்தான ஆட்சி நடைபெற்று வந்தது. இனி அதே நிலைமை மீண்டும் தொடர உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்பார்.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளிவந்துள்ளது. மக்களை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் தள்ளிப் போவதற்கு அதிமுகவின் பலவீனமே காரணம். ஒரு வாக்களித்துவிட்டு தற்போது மூன்றாவது முதல்வரைப் பார்க்கவுள்ளோம், விரைவில் நான்காவது முதல்வரையும் பார்க்கும் நிலை ஏற்படலாம் என்றார் ஸ்டாலின்.