சென்னை: தமிழக மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கும், மக்கள் நலக் கொள்கைக்காகவும்தான் வாக்களித்தார்கள் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், அதிமுக பொதுச் செயலராக இருக்கும் வி.கே. சசிகலாவை அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரு மனதாக முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.
முதல்வராக பதவியேற்க சசிகலாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அதிமுக கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையுடன் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் புரளிகளைப் பரப்பி வருகின்றனர்.
மக்கள் வாக்களித்தது இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக ஆட்சிக்கும், மக்கள் நல கொள்கைகளுக்கும்தான். இது இரட்டை இலைக்கு விழுந்த வாக்கு, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நல்லாட்சிக்கும், அதனைப் பின்பற்றிய ஜெயலலிதாவின் ஆட்சிக்கும் விழுந்த வாக்குகள்தான்.
ஜெயலலிதா அதிமுகவின் ஒரு தூண். அதோடு, ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இருந்து அனுபவத்தை நேரடியாகக் கற்ற சசிகலாவும் ஒரு தூண் தான். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் செல்வாக்கு, பொதுச் செயலர் சசிகலா செல்வாக்கு என்று பிரித்து பார்க்கவே கூடாது. அதிமுக பொதுச் செயலர் சசிகலா தமிழக முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார்.
தொலைக்காட்சிகள் நேர்மறையான செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முதல்வரை தேர்வு செய்யலாம். முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர், பதவிப் பிரமாணம் செய்து கொண்ட 6 மாதத்துக்குள் சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான் சட்டம் என்று பொன்னையன் கூறினார்.