இலங்கைச் சிறையிலுள்ள 35 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து இயந்திரப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 பேரும், மற்றொரு படகில் 3 பேரும் என 10 பேரை இலங்கைக் கடற்படையினர் பிப்ரவரி 7-இல் கைது செய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.
இதில், 7 பேர் சென்ற படகு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தத்தளித்து கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் 3 பேர் காப்பாற்றச் சென்றவர்கள்.
இது ஏற்க முடியாத, மனிதாபிமானம் அற்ற செயல். கடலுக்கான சர்வதேச சட்டத்தின்படி, கடலுக்குள் ஆதரவற்று நிற்கும் படகுகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
ஏற்கெனவே 2 ஆண்டுகளாக இலங்கை வசமுள்ள 119 மீன்பிடி படகுகள் அப்படியே விடப்பட்டு விட்டதால், கடுமையான சேதம் ஏற்பட்டுவிட்டது.
புதுப்பிக்கப்பட்ட நிலையில் அந்தப் படகுகளை அவர்களுக்கு திருப்பித் தந்தால்தான் அவர்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும்.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 35 மீனவர்களையும், 120 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுக்குள் ஆதரவற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.