மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த ஒரு வாரமாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரு சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால், சென்னையையொட்டிய கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் படலம் பரவியது. இதை அகற்றும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலும் எண்ணெய் படலம் பரவத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, கடல் நீரின் நிறம் மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும், கடலில் வாழும் பல்வேறு அரிய வகை உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
இவற்றை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இறந்து கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்களை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதே பகுதியில் புதைத்து வருகின்றனர். சரியாக குழி தோண்டி புதைக்கப்படாததால் அவை அழுகிய நிலையில் வெளியே தெரிகின்றன.
இதனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அவற்றை நாய்கள் வெளியே இழுத்து போடுகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுன்றனர்.
எனவே, இறந்து கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்களை முறையாக புதைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.