அரசு கலைக்கல்லூரிகளில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதை கண்டித்து கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் கரூர் கிளை சார்பில் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 396 பேராசிரியர்கர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் 300 பேரை பணியில் அமர்த்தப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து இச்செயலைக்கண்டித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் தமிழகத்தில் உள்ள 85 அரசு கலைக்கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தினை துவங்கினர். இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக காலையில் போராட்டத்தை துவக்கினர்.
கரூர் அரசு கலைக்கல்லூரியில் கிளைத்தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் செயலாளர் சுல்தான் முன்னிலை வகித்தார். இதில் உதவி பேராசிரியர்கள், கெளரவ பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.