சென்னை: சசிகலாவிடம் கைகட்டி நிற்பதற்காக ஆர்கே நகர் மக்கள் என்னை பார்த்து ஆவேசத்துடன் கேள்வி கேட்கிறார்கள், திட்டித் தீர்ப்பதாகக் கூறிய மதுசூதனன், அந்த பாவத்தைக் கழுவவே பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் அடைந்ததாக கூறியுள்ளார்.
அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது ஆதரவைத் தெரிவித்தார்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவருக்கான ஆதரவு அதிகரித்து வரும்நிலையில், திடீர் திருப்பமாக அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் செயல்பட்டிருப்பது தமிழக அரசியலில் மேலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் மதுசூதனன் பேசுகையில், சசிகலாவை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும். அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்று கூறினார்.
எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்திற்குள் அடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்.
தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை. காப்பற்றப்பட வேண்டிய கட்டத்தில் அதிமுக உள்ளது. ஆபத்தான காலங்களிலும் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர் பன்னீர்செல்வம். எனவே, அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதிமுகவினர் சசிகலாவை நிராகரிக்க வேண்டும் என்றும் மதுசூதனன் கேட்டுக் கொண்டார். சசிகலாவிடம் கைகட்டி நிற்பதற்காக ஆர்.கே.நகர் மக்கள் தன்னை திட்டித் தீர்ப்பதாகக் குறிப்பிட்ட மதுசூதனன், அந்த பாவத்தைக் கழுவவே பன்னீர்செல்வத்திடம் தஞ்சம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.