மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு விவரம்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், மறைந்த முதல்வரின் உறவினர் தீபா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், வி.கே.சசிகலா, அவரது கணவர் நடராஜன், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி உள்பட 12 பேருக்கு எதிராக, தான் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
இவர்கள் அனைவரும் சதியில் ஈடுபட்டு, முதல்வர் மரணத்துக்கு காரணமாக இருந்தது மட்டும் இல்லாமல் அவரது சொத்துக்களையும் அபகரித்துள்ளனர். மேலும் தன்னை நிர்பந்தித்து ராஜிநாமா செய்ய வைத்தனர் என்றும் முதல்வர் பன்னீர் செல்வமும் தெரிவித்துள்ளார். இது குறித்தும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இரவோடு இரவாக புகார் அளித்துள்ளேன்.
பி.ஹெச்.பாண்டியன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதல்வரின் உறவினர் தீபா ஆகியோருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மனுவில் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.