பவானி அருகே அம்மாபேட்டையில் ஏற்பட்ட கடும் வறட்சியால், சாகுபடி செய்திருந்த பருத்தி கருகிய வேதனையில் விவசாயி மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.
அம்மாபேட்டை, ஆரியக்கவுண்டனூர் கலர்காட்டைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராஜேந்திரன் (54). விவசாயியான இவர், 2 ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். கடுமையான வறட்சியால் கிணற்றில் நீர் வற்றியதாலும், மேட்டூர் வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படாததாலும் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகத் தொடங்கின.
இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுமார் 900 அடிக்கு ஆழ்குழாய்க் கிணறு தோண்டியும் தண்ணீர் வராததால் வேதனையுடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், ராஜேந்திரனுக்கு புதன்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.