தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று அதிரடியாக நடந்தேறிய காட்சிகளும், அதிரடியாக சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர்செல்வமும், சசிகலாவும் தனித்தனியாக சந்து பேசினார்கள்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலா ஆகியோர் தம்மை தனித் தனியே சந்தித்துப் பேசிய பிறகு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த முடிவையும் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பது குறித்து சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவுகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசு, குடியரசு தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று இரவு அனுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க அழைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:
தமிழக சட்டப்பேரவையின் மொத்த இடங்கள்: 234
தற்போது கட்சி வாரியாக உள்ள பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:
அதிமுக - 134
திமுக - 89
காங்கிரஸ் - 09
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 01
சபாநாயகர் ப.தனபால் - 01
ஆர்.கே.நகர் தொகுதி(ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள தொகுதி) - 01
நியமன உறுப்பினர் - 01
மொத்தம் = 235
தற்போது 233 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிமுகவுக்கு 134 பேர் உள்ளனர். நியமன உறுப்பினர் ஒருவர் என 135 பேர் உள்ளனர். இவர்களில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு 5 பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதி 129 பேர் சசிகலா அணியில் உள்ளனர்.
இந்நிலையில், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க உத்தரவிட்டாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிரூக்க 118 பேரவை உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது உண்மை நிலை.
தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க டிவிஷன் வாரியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ரகசியமாக பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் வாக்களிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதில் எந்த நடைமுறையை பின்பற்ற மத்திய அரசு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை வழங்கும் அதில், எந்த நடைமுறையை பின்பற்றி ஆளுநர் நடந்துகொள்ளவார் என்பதும் பேரவையில் தான் தெரியவரும்.
தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தான் முடிவு செய்ய வேண்டுமென ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.