ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக, வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
ஆதரவுக் கடிதத்தை வைத்து: ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக எம்.எல்.ஏ.,க்கள் அளித்த ஆதரவு கடிதங்களை, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து சசிகலா வணங்கினார்.
அதன்பின், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அண்ணாவின் நினைவிடத்திலும் அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த வந்தபோது, சசிகலாவுக்கு கட்சியினர் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர்.
ஆளுநர் மாளிகைக்கு: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பிறகு, இரவு 7.05 மணி அளவில், சசிகலா ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.