சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான பிரச்சனையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசார் ராவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது சட்டப்பேரவை குழு கட்சி தலைவரை தேர்வு செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அந்த தலைவருக்கு முதல்வர் பதவிக்கான தகுதி உள்ளதா என்று கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை உள்ளது. அதைத்தான் ஆளுநரும் கேட்க வேண்டும்.
ஒருவேளை, சசிகலா தகுதியானவர் என மீண்டும் வலியுறுத்தப்பட்டால், ‘நல்லது. நான் உங்கள் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். நான் அரசியல் சட்ட நிலைப்பாட்டையும், நெறிமுறையையும் பார்த்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே, சிறிது நாட்கள் பொறுத்திருங்கள்’ என்று ஆளுநர் கூற வேண்டும்.
ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி நெருங்கி வருகிறது. அதுவரை ஆளுநர் காத்திருக்க வேண்டும். அவர் உடனடியாக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒருவேளை, சசிகலாவுக்கு தகுதியிழப்பு ஏதும் ஏற்படாவிட்டால், அப்போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடமை, ஆளுநருக்கு உள்ளது என்று தனது யோசனை தெரிவித்துள்ளார்.