முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் ப.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 15-க்கும் மேற்பட்ட வார்டுகளின் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தாமாகவே முன்வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி வகித்து வரும் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டியது அதிமுக உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகவே, கோவை மாநகராட்சியில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள வார்டு செயலாளர்களை அழைத்துக் கொண்டு, விரைவில் சென்னை சென்று அவரைச் சந்திக்க உள்ளோம் என்றார்.