பெரம்பலூரில் கேப்டன் வாழ்க, வாழ்க என்று கோஷமிட்ட தொண்டருக்கு விஜயகாந்த் பளார் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேமுதிக வளர்ச்சி நிதிக்காக மாவட்டம்தோறும் சென்று, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை விஜயகாந்த் நடத்தி வருகிறார். அதன்படி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் விஜயகாந்த் தங்கியிருந்தார்.
அப்போது, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கட்சி செயல்பாடு, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியின் நிலவரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.
மாவட்ட செயலர் துரை. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், மாநில துணை செயலர்கள் உமாநாத், ஜாகீர், கேப்டன் மன்ற செயலர் அன்புச்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு அவர் காரில் ஏறி புறப்பட மண்டபத்தைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் அருகே நின்ற தொண்டர் ஒருவர் கேப்டன் வாழ்க, வாழ்க என்று கோஷம் எழுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் திடீரென அந்த தொண்டரின் தலையில் தாக்கி, கன்னத்திலும் அறைந்தார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.